• Sat. Jul 27th, 2024

சீஷெல்ஸ் கடலில் மீன் பிடித்த இலங்கை கேப்டனுக்கு நேர்ந்த கதி! நீதிமன்ற தீர்ப்பால் அதிர்ச்சி

Aug 5, 2021

சீஷெல்ஸ் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த இலங்கை கப்பலின் கப்டனுக்கு 167,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

சீஷெல்ஸ் உயர் நீதிமன்றம் நேற்று இந்த தீர்ப்பை அளித்துள்ளது. மீன்பிடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக மகாலிங்கம் கணபதி (32) என்பவருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து சீஷெல்ஸ் மீன்வள சட்டத்தின் கீழ் அவர் தண்டிக்கப்பட்டார்.

32 வயதான இவர், ஜூன் 1 ம் திகதி, சம்பத் 7 என்ற மீன்பிடி படகுடன் கைதானார். சீஷெல்ஸ் கடலில் மீன்பிடிக்க உரிமம் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட குற்ச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.

தலைமை நீதிபதி, ரோனி கோவிந்தன், மீன்பிடி கப்பல் உரிமம் இல்லாமல் மீன்பிடித்தல் குற்றங்களை செய்ததற்காக 167,000 அமெரிக்க டொலர் (33383233.20இலங்கை ரூபா) அபராதம் விதித்தார்.

அத்துடன் 4 நாட்களுக்குள் இந்த அபராதத்தை செலுத்த தவறினால், குற்றம் சாட்டப்பட்டவர் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது மீன்பிடிச் சட்டத்தின் பிரிவு 70 -ன் படி, குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்படும் கப்பலில் காணப்பட்ட எந்தப் பகுதியும் சீஷெல்ஸ் குடியரசிற்கு உடைமையாக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, கப்பல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அபராதம் செலுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக ஓகஸ்ட் 18 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு அழைக்கப்படும் என்றும் , அதுவரை அவர் நாட்டை விட்டு வெளியேறவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த தண்டனைக்கு எதிராக 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய இலங்கை கேப்டனுக்கு உரிமை உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.