• Tue. Mar 26th, 2024

இலங்கைப்பெண்- ஆர்யா விவகாத்தில் அதிரடி திருப்பம்!

Aug 25, 2021

ஜெர்மனி வாழ் இலங்கை தமிழ் பெண்ணிடம் நடிகர் ஆர்யா என நடித்து மோசடி செய்த இருவரை பொலிசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஜெர்மனி வாழ் இலங்கை தமிழ் பெண் ஒருவர், நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னிடமிருந்து, சுமார் 70 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்று, பின் திருமணம் செய்யாமல் ஏமாற்றி விட்டதாக , நடிகர் ஆர்யா மீது புகார் அளித்திருந்தார்.

அவரின் புகாரின்படி மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பொலிசாரின் தொடர் விசாரணையில் நடிகர் ஆர்யாவிற்கும் இந்த வழக்கிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது உறுதியானது.

அத்துடன் , விசாரணையில், சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த முகமது அர்மான், சமூக வலைதளத்தில் நடிகர் ஆர்யாவாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, ஜெர்மனி வாழ் இலங்கைத் தமிழ் பெண்ணிடம் பேசி ஏமாற்றியுள்ளனர்.

நடிகர் ஆர்யாவின் பெயரில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, 70 லட்சம் ரூபாய் வரை பணம் பறித்ததும் தெரிய வந்தது. இந்த குற்றச் செயலுக்கு முகமது அர்மானின் மைத்துனர் முகமது ஹுசைனி பையாக் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பொலிசாரின் தனிப்படையினர், குற்றவாளிகள் இருவரையும் ராணிப்பேட்டை மாவட்டம் பெரும்புலிப்பாக்கத்தில் இன்று கைது செய்தனர்.

இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து 2 செல் போன்கள், 1 லேப் டாப், 1 ஐபேட் மற்றும், 65 லட்சம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட ஆவணங்களை போலீசார் கைப்பற்றியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்த பொலிசாருக்கு நடிகர் ஆர்யா நன்றி தெரிவித்துள்ளார்.