• Sat. Jul 20th, 2024

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 28

Aug 28, 2021

ஆகத்து 28 கிரிகோரியன் ஆண்டின் 240 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 241 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 125 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

475 – உரோமைத் தளபதி ஒரெசுடசு மேற்கு உரோமைப் பேரரசர் யூலியசு நேப்போசை தலைநகர் ராவென்னாவில் இருந்து வெளியேற்றினான்.

632 – முகம்மது நபியின் மகள் பாத்திமா இறந்தார். இவரின் இறப்பின் காரணம் சுனி, சியா முசுலிம்களிடையே சர்ச்சைக்குரிய தலைப்பாக இருந்து வருகிறது.

1521 – உதுமானியத் துருக்கிகள் பெல்கிறேட் நகரைக் கைப்பற்றினர்.

1524 – எசுப்பானியரின் குவாத்தமாலா ஆக்கிரமிப்பின் போது, காக்சிக்கல் மாயா மக்கள் தமது முன்னாள் எசுப்பானியக் கூட்டுப் படைகளை எதிர்த்துக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

1542 – துருக்கிய-போர்த்துக்கீசப் போர்: உவோஃப்லா நகரில் இடம்பெற்ற போரில், போர்த்துக்கீசப் படையினர் சிதறி ஓடினர். அவர்களது தலைவர் கிறித்தோவாவோ ட காமா கைது செய்யப்பட்டு, தூக்கிலிடப்பட்டார்.

1619 – இரண்டாம் பேர்டினண்ட் புனித உரோமைப் பேரரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1640 – இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்லசின் இராணுவம் நியூபர்ன் போரில் இசுக்கொட்டியப் படைகளிடம் தோற்றது.

1648 – இரண்டாவது ஆங்கிலேய உள்நாட்டுப் போர்: கொல்செஸ்டர் மீதான 11-கிழமை முற்றுகை நிறைவடைந்தது. அரசுப் படைகள் நாடாளுமன்றப் படைகளிடம் சரணடைந்தன.

1709 – மணிப்பூர் மன்னராக பாம்கீபா முடிசூடினார்.

1757 – முதலாவது ரூபாய் நாணயம் கல்கத்தாவில் வார்க்கப்பட்டது.

1789 – சனிக் கோளின் என்சலடசு என்ற புதிய சந்திரனை வில்லியம் எர்செல் கண்டுபிடித்தார்.

1810 – கிராண்ட் போர்ட் சமரில் அரச கடற்படைக் கப்பல்கள் பிரான்சிடம் சரணடைந்தன.

1833 – ஐக்கிய இராச்சியத்தின் நான்காம் வில்லியம் மன்னர் அடிமை ஒழிப்புச் சட்டம் 1833 ஐ அங்கீகரித்தார். ஆனாலும், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இந்திய அடிமை ஒழிப்புச் சட்டம் 1843 அமுலுக்கு வரும் வரை அடிமை முறை சட்டபூர்வமாக இருந்தது.

1844 – பிரெட்ரிக் எங்கெல்ஸ் மற்றும் கார்ல் மார்க்ஸ் இருவரும் பாரிசில் சந்தித்தனர்.

1845 – சயன்டிஃபிக் அமெரிக்கன் முதலாவது இதழ் வெளிவந்தது.

1849 – ஒரு மாதகால முற்றுகையின் பின்னர் வெனிசு ஆஸ்திரியாவிடம் வீழ்ந்தது.

1859 – 1859 சூரியப் புயல் பூமியைத் தாக்கிய அதிதீவிர புவிக்காந்தப் புயல் ஆகும். அமெரிக்கா, ஐரோப்பா முழுவதும் தொலைத்தந்திச் சேவைகள் பாதிப்படைந்தன.

1867 – ஐக்கிய அமெரிக்கா ஆளில்லா மிட்வே தீவுகளைக் கைப்பற்றியது.

1867 – நாகை மாவட்டத்தில் அமைந்திருந்த சூளாமணி புத்த விகாரத்தை இடிக்க ஆங்கிலேய அரசு உத்தரவிட்டது

1879 – சூலுக்களின் கடைசி மன்னன் செட்சுவாயோ பிரித்தானியர்களினால் சிறைப்பிடிக்கப்பட்டான்.

1898 – காலெப் பிராடம் தான் கண்டுபிடித்த மென்பானத்திற்கு பெப்சி கோலா எனப் பெயரிட்டார்.

1913 – நெதர்லாந்தின் அரசி வில்கெல்மினா டென் ஹாக் நகரில் அமைதி அரண்மனையைத் திறந்தார்.

1914 – முதலாம் உலகப் போர்: அரச கடற்படை செருமானியக் கப்பல்களை எலிகோலாந்து பெருங்குடாப் போரில் தோற்கடித்தன.

1914 – முதலாம் உலகப் போர்: செருமானியப் படைகள் பெல்சியத்தில் நாமூர் நகரைக் கைப்பற்றின.

1916 – முதலாம் உலகப் போர்: செருமனி உருமேனியா மீதும், இத்தாலி செருமனி மீது போரை ஆரம்பித்தன.

1924 – சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஜோர்ஜியர்கள் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.

1943 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக டென்மார்க்கில் பொது வேலை நிறுத்தம் ஆரம்பமானது. அடுத்த நாள் அங்கு இராணுவச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

1944 – இரண்டாம் உலகப் போர்: மர்சேய், துலோன் ஆகியன விடுவிக்கப்பட்டன.

1963 – மார்ட்டின் லூதர் கிங், என் கனவு யாதெனில்… என்ற புகழ்பெற்ற வார்த்தைகளுடன் சொற்பொழிவாற்றினார்.

1964 – ஐக்கிய அமெரிக்கா, பிலடெல்பியாவில் இனக்கலவரம் ஆரம்பமானது.

1968 – சிகாகோவில் சனநாயகவாதிகளின் தேசிய மாநாட்டின் போது கலவரம் வெடித்தது.

1988 – செருமனியில் வான வேடிக்கை விழா ஒன்றின் போது மூன்று விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பார்வையாளர்கள் மீது வீழ்ந்ததில் 75 பேர் கொல்லப்பட்டு 346 பேர் படுகாயமடைந்தனர்.

1990 – குவைத்தைத் தனது புதிய மாகாணமாக ஈராக் அறிவித்தது.

1990 – சுழல் காற்று அமெரிக்காவின் இலினொய் மாநில நகரங்களைத் தாக்கியதில் 29 உயிரிழந்தனர்.

1993 – கலிலியோ விண்கலம் டாக்டில் என்று பின்னர் பெயரிடப்பட்ட சந்திரன் ஒன்றைக் கண்டுபிடித்தது.

1996 – வேல்ஸ் இளவரசர் சார்லசு, இளவரசி டயானா மணமுறிவு ஏற்பட்டது.

1998 – பாக்கித்தானின் நாடாளுமன்றம் “திருக்குர்ஆன், நபிவழி” ஆகியவை “அதியுயர் சட்டம்” என அறிவித்தது. இச்சட்டமூலத்தை பாக்கித்தான் மேலவை நிராகரித்தது.

1998 – இரண்டாவது காங்கோ போர்: காங்கோ இராணுவம் அங்கோலா, சிம்பாப்வே படைகளின் உதவியுடன், கின்சாசா மீதான ருவாண்டாவின் தாக்குதலை முறியடித்தது.

2006 – திருகோணமலை, சம்பூரில் இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்தியதில் 20 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

2006 – இலங்கையில் பத்தாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் முடிவடைந்தன.

2011 – ராஜீவ் காந்தி படுகொலையில் குற்றஞ்சாட்டப்பட்டோரைத் தூக்கிலிடக்கூடாது எனக் கோரி காஞ்சிபுரத்தில் செங்கொடி என்ற 21 வயது பெண் போராளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.