• Mon. Apr 15th, 2024

வரலாற்றில் இன்று ஜூன் 17

Jun 17, 2021

சூன் 17 கிரிகோரியன் ஆண்டின் 168 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 169 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 197 நாட்கள் உள்ளன.

653 – திருத்தந்தை முதலாம் மார்ட்டின் கைது செய்யப்பட்டு தேசத்துரோகக் குற்றச்சாட்டுடன் கான்ஸ்டண்டினோபில் கொண்டு செல்லப்பட்டார்.

1244 – பாரிசில் பெருந்தொகையான யூத சமய கையெழுத்துப்படிகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

1397 – டென்மார்க், சுவீடன், நோர்வே இணைந்த கல்மார் ஒன்றியம் டென்மார்க்கின் முதலாம் மார்கரெட்டின் ஆட்சியில் உருவாக்கப்பட்டது.

1579 – சர் பிரான்சிஸ் டிரேக் நோவா அல்பியனில் (இன்றைய கலிபோர்னியா) தரையிறங்கி அதனை இங்கிலாந்துக்காக உரிமை கோரினார்.

1596 – இடச்சு நாடுகாண் பயணி வில்லியம் பாரென்ட்சு ஆர்க்டிக் தீவுக்கூட்டமான ஸ்பிட்சுபெர்கனைக் கண்டுபிடித்தார்.

1631 – மும்தாசு மகால் பிள்ளைப்பேற்றின் போது இறந்தார். அவரது கணவர் முகலாயப் பேரரசர் ஷாஜகான் அடுத்த 17 ஆண்டுகளுக்கு மும்தாசுக்கான நினைவுச்சின்னமான தாஜ்மகாலைக் கட்டுவதில் முனைந்தார்.

1767 – ஆங்கிலேயக் கப்பல் தலைவர் சாமுவேல் வாலிசு தாகித்தியைக் கண்டறிந்தார்.

1794 – ஆங்கிலோ-கோர்சிக்கன் இராச்சியம் அமைக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் இது கலைந்தது.

1839 – அவாய் இராச்சியத்தில், ரோமன் கத்தோலிக்கர்கள் சுதந்திரமாக சமய வழிபாட்டில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர்.

1843 – நியூசிலாந்தில் மாவோரி பழங்குடியினருக்கும், பிரித்தானியக் குடியேறிகளுக்கும் இடையில் சமர்கள் இடம்பெற்றன.

1885 – விடுதலைச் சிலை நியூயார்க் துறைமுகத்தை வந்தடைந்தது.

1900 – மேற்கு கூட்டுப் படைகளும் சப்பானியப் படைகளும் இணைந்து சீனாவின் தியான்ஜின், தாக்கு கோட்டைகளைக் கைப்பற்றின.

1911 – செங்கோட்டை வாஞ்சிநாதன் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையை சுட்டுக் கொன்று தன்னையும் சுட்டு சாவடைந்தார்.

1929 – நியூசிலாந்து மர்ச்சிசன் நகரில் 7.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 17 பேர் உயிரிழந்தனர்.

1933 – அமெரிக்காவின் கேன்சசு நகரில் கொள்ளைக்காரன் பிராங்க் நாஷ் என்பவனை விடுவிக்கும் பொருட்டு கொள்ளைக்காரர் நடத்திய தாக்குதலில் நான்கு எஃப்பிஐ பணியாளர்களும், பிராங்க் நாஷும் கொல்லப்பட்டனர்.

1939 – பிரான்சில் கடைசித் தடவையாக பகிரங்கமாகக் கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. இயூசன் வீடுமேன் என்பவர் இவ்வாறு கொல்லப்பட்டார்.

1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் லான்காஸ்ட்ரியா கப்பல் செருமானிய லூப்டுவாபே படையினரால் சென் நசேர் அருகில் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டதில் குறைந்தது 3,000 பேர் உயிரிழந்தனர்.

1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியப் படையினர் லிபியாவின் கப்பூசோ கோட்டையைத் தாக்கி இத்தாலியப் படையினரிடம் இருந்து கைப்பற்றினர்.

1940 – எசுத்தோனியா, லாத்வியா, லிதுவேனியா ஆகிய மூன்று பால்ட்டிக் நாடுகளும் சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டினுள் வந்தன. 1991 இலேயே இவை விடுதலை பெற்றன.

1944 – ஐசுலாந்து டென்மார்க்கிடம் இருந்து விடுதலையை அறிவித்து குடியரசானது.

1948 – டக்லசு டிசி-6 என்ற அமெரிக்க விமானம் பென்சில்வேனியா, கார்மேல் குன்றில் மோதியதில் அனைத்து 43 பயணிகளும் கொல்லப்பட்டனர்.

1953 – பனிப்போர்: பெர்லினில் கிழக்கு செருமனி அரசுக்கெதிராக தொழிலாளர்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் சோவியத் படைகளினால் நசுக்கப்பட்டதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

1960 – நே பெர்சு அமெரிக்கப் பழங்குடியினர் 1863 உடன்படிக்கைப்படி அவர்களது 7 மில்லியன் ஏக்கர் நிலம் குறைவாக மதிப்பீடு (4 சதம்/ஏக்கர்) செய்யப்பட்டு கொள்வனவு செய்யப்பட்டமைக்காக $4 மில்லியன் இழப்பீடு பெற்றனர்.

1963 – தெற்கு வியட்நாமில் பௌத்தர்கள் 2,000 பேர் வரை கலகம் செய்தனர். ஒருவர் கொல்லப்பட்டார்.

1967 – அணுகுண்டு சோதனை: சீனா தனது முதலாவது ஐதரசன் குண்டை வெற்றிகரமாகப் பரிசோதித்ததாக அறிவித்தது.

1985 – டிஸ்கவரி விண்ணோடத்தில் முதலாவது அராபிய விண்வெளிவீரர் (சுல்தான் பின் சல்மான் பின் அப்துலசீசு அல் சவுதி) விண்வெளிக்கு சென்றார்.

1991 – தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்: தென்னாப்பிரிக்கர்கள் அனைவரும் பிறப்பின் போது இனவாரியாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற சட்டத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் நிராகரித்தது.

1992 – “கூட்டு ஆயுதக்குறைப்பு” ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், உருசிய அரசுத்தலைவர் போரிஸ் யெல்ட்சின் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

2006 – மன்னார் பேசாலைப் பகுதியில் கடற்படையினருக்கும் புலிகளுக்கும் இடையிலான மோதலின் பின்னர் ஆறு பொதுமக்கள் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

2015 – சார்லசுட்டன் படுகொலை: தென் கரொலைனாவில் ஆப்பிரிக்க மெதடித்த தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

2017 – மத்திய போர்த்துகல் பகுதியில் காட்டுத்தீ பரவியதில் 64 பேர் உயிரிழந்தனர், 204 பேர் காயமடைந்தனர்.