• Sat. Jul 27th, 2024

வரலாற்றில் இன்று அக்டோபர் 13

Oct 13, 2021

அக்டோபர் 13 கிரிகோரியன் ஆண்டின் 286 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 287 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 79 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

54 – உரோமைப் பேரரசர் குளோடியசு (படம்) நஞ்சுண்ட நிலையில் மர்மமான முறையில் இறந்தார், அவரது நான்காவது மனைவியின் மகன் நீரோ பேரரசனானார்.

1269 – வெசுட்மினிஸ்டர் மடத்தின் இன்றைய தேவாலயம் திறக்கப்பட்டது.

1307 – நூற்றுக்கணக்கான தேவாலய புனித வீரர்கள் பிரான்சில் நான்காம் பிலிப்பு மன்னரின் ஆட்களால் கைது செய்யப்பட்டனர்.

1332 – ரிஞ்சின்பால் கான், மங்கோலியரின் ககான் ஆகவும், யுவான் பேரரசனாகவும் முடிசூடினான். இவன் 53 நாட்கள் மட்டும் பதவியில் இருந்தான்.

1399 – இங்கிலாந்து மன்னர் நான்காம் என்றியின் முடிசூட்டு விழா வெஸ்ட்மின்ஸ்டர் மடம்யில் நடைபெற்றது.

1644 – சுவீடன்-டச்சு கடற்படையினர் பெகுமாம் சமரில் டென்மார்க் கடற்படையைத் தோற்கடித்து, 1,000 இற்கும் அதிகமானோரைச் சிறைப்பிடித்தனர்.

1710 – பிரெஞ்சு அகாடியாவின் தலைநகர் போர்ட்-ரோயல் பிரித்தானியப் படைகளிடம் வீழ்ந்தது.

1792 – வெள்ளை மாளிகைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

1821 – மெக்சிக்கோ பேரரசு விடுதலையை பகிரங்கமாக அறிவித்தது.

1881 – இன்றைய எபிரேய மொழியின் முதலாவது அறியப்பட்ட உரையாடல் எலியேசர் பெந்யெகுடாவினால் பதியப்பட்டது.

1884 – அனைத்துலக நேரம் கணிக்கும் இடமாக இலண்டனில் உள்ள கிறீனிச்சு தெரிவு செய்யப்பட்டது.

1885 – ஜோர்ஜியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

1892 – புகைப்படங்கள் வாயிலாக முதலாவது வால்வெள்ளியை எட்வர்ட் பார்னார்டு கண்டறிந்தார்.

1917 – யாழ்ப்பாணம் மாநகராட்சிப் பகுதி மத்திய, மேற்கு, கிழக்கு என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன.

1923 – துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல் இலிருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது.

1943 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியின் புதிய அரசு நேசப் படைகளுடன் இணைந்து செருமனியுடன் போர் தொடுத்தது.

1944 – இரண்டாம் உலகப் போர்: லாத்வியாவின் தலைநகர் ரீகா சோவியத்தின் செஞ்சேனையினால் கைப்பற்றப்பட்டது.

1953 – டட்லி சேனநாயக்கா இலங்கைப் பிரதமர் பதவியைத் துறந்தார்.

1972 – உருகுவை வான்படை விமானம் ஒன்று அந்தீசு மலைகளில் மோதியது. டிசம்பர் 23 ஆம் நாள் 45 பேர்களில் 16 பேர் மட்டும் மீட்கப்பட்டனர்.[4]

1972 – மாஸ்கோவுக்கு வெளியே ஏரோபுளொட் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 174 பேர் உயிரிழந்தனர்.

1976 – பொலிவியாவைச் சேர்ந்த போயிங் 707 சரக்கு விமானம் ஒன்று சாண்டா குரூசு நகரில் வீழ்ந்ததில் தரையில் நின்ற 97 பேர் (பெரும்பாலானோர் குழந்தைகள்) உட்பட 100 கொல்லப்பட்டனர்.

1990 – லெபனான் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. சிரியப் படைகள் லெபனானின் பல பகுதிகளைத் தாக்கின. அரசுத்தலைவர் மாளிகையில் இருந்து ஜெனரல் மைக்கேல் அவுன் வெளியேற்றப்பட்டார்.

1992 – அன்டோனொவ் விமானம் ஒன்று உக்ரைன், கீவ் நகருக்கருகில் வீழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர்.

2010 – சிலியில் நிலக்கரிச் சுரங்கம் ஏற்பட்ட விபத்தினால் 69 நாட்களாக சுரங்கத்தில் சிக்கிய அனைத்து 33 சுரங்கத் தொழிலாளரும் மீட்கப்பட்டனர்.

2013 – மத்தியப் பிரதேசம், ததியா மாவட்டத்தில் ரத்தன்கார் மாதா கோவிலில் நவராத்திரி நாளில் பாலம் ஒன்றில் ஏற்பட்ட நெரிசலில் 115 பேர் உயிரிழந்தனர், 110 பேர் காயமடைந்தனர்.

2014 – இலங்கையில் 1990 முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம் வரையான யாழ்தேவி தொடருந்து சேவை, 24 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்டது.

2016 – மாலைத்தீவுகள் பொதுநலவாயத்தில் இருந்து வெளியேறுவதாக அற்வித்தது.