• Sun. Jul 21st, 2024

வரலாற்றில் இன்று செப்டம்பர் 25

Sep 25, 2021

செப்டம்பர் 25 கிரிகோரியன் ஆண்டின் 268 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 269 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 97 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

275 – உரோமில் பேரரசர் அவுரேலியன் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, டசீட்டசு உரோமைப் பேரரசராக நியமிக்கப்பட்டார்.

1237 – இங்கிலாந்தும் இசுக்காட்லாந்தும் தமது பொது எல்லைகளை வரையறுக்கும் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டன.

1396 – உதுமானியப் பேரரசர் முதலாம் பயெசிது கிறித்தவ இராணுவத்தை நிக்கோபோலிசு நகரில் தோற்கடித்தார்.

1513 – எசுப்பானிய நாடுகாண் பயணி பாஸ்கோ நூனியெத் தே பால்போவா பெருங்கடல் ஒன்றை அடைந்தார். இது பின்னர் பசிபிக் பெருங்கடல் என்ற பெயரைப் பெற்றது.

1690 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செய்திப்பத்திரிகை (Publick Occurrences Both Foreign and Domestick) முதலும் கடைசித் தடவையாகவும் வெளிவந்தது. இது அரசினால் தடை செய்யப்பட்டது.

1789 – ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் அமெரிக்க அரசியலமைப்பிற்கு உரிமைகளுக்கான 10 திருத்தங்கள் உட்பட 12 திருத்தங்களைக் கொண்டு வந்தது.

1862 – செப்பு நாணயம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.[1]

1868 – இளவரசர் அலெக்சி அலெக்சாந்திரொவிச்சை ஏற்றிச் சென்ற உருசியப் பேரரசின் அலெக்சாந்தர் நேவ்ஸ்கி கப்பல் யுட்லாண்டு அருகே மூழ்கியது.

1906 – கரையிலிருந்து படகை வழி நடத்தும் முறை எசுப்பானியாவில் இயக்கிக் காட்டப்பட்டது. தொலைக் கட்டுப்படுத்தி பயன்படுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

1926 – அடிமை வணிகத்தைத் தடுக்கும் பன்னாட்டு ஒப்பந்தம் உலக நாடுகள் அணியின் ஆதரவில் கையெழுத்திடப்பட்டது.

1942 – இரண்டாம் உலகப் போர்: பெரும் இனவழிப்பில் இருந்து தப்பிய யூதர்களை அகதிகளாக ஏற்க சுவிட்சர்லாந்து மறுத்தது.

1956 – அத்திலாந்திக் பெருங்கடலைக் கடந்த முதலாவது தொலைபேசிக் கம்பித்திட்டம் TAT-1 நிறுவப்பட்டது.

1957 – ஐக்கிய அமெரிக்காவில் ஆர்கன்சஸ் மாநிலத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 9 கருப்பின மாணவர்கள் 300 இராணுவத்தினர்களின் பாதுகாப்புடன் பாடசாலை சென்றனர்.

1959 – இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா சோமராம தேரர் என்ற புத்த பிக்கு ஒருவரினால் சுடப்பட்டுப் படுகாயமடைந்து அடுத்த நாள் இறந்தார்.

1962 – வடக்கு ஏமன் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. ஏமன் மன்னர் இமாம் அல்-பத்ர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். அப்துல்லா அல்-சலால் ஏமனை ஒரு குடியரசாக்கி, தன்னை அதன் அரசுத்தலைவராக அறிவித்தார்.

1962 – அல்சீரிய மக்கள் சனநாயகக் குடியரசு அமைக்கப்பட்டது.

1964 – மொசாம்பிக்கில் போர்த்துகலுக்கு எதிரான விடுதலைப் போர் ஆரம்பமானது.

1978 – கலிபோர்னியாவில் சான் டியாகோ நகரில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டதில் 144 பேர் உயிரிழந்தனர்.

1981 – பெலீசு ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது.

1983 – வட அயர்லாந்தில் 38 ஐரியக் குடியரசு இராணுவக் கைதிகள் சிறையை உடைத்து தப்பினர்.

1992 – செவ்வாய்க் கோளை நோக்கிய “செவ்வாய் நோக்கி” என்ற விண்கலத்தை நாசா ஏவியது. 11 மாதங்களின் பின்னர் இவ்விண்கலம் செயலிழந்தது.

1992 – யாழ்ப்பாணம், பூநகரியில் 62 இராணுவக் காவலரண்கள் விடுதலைப் புலிகளினால் தாக்கி அழிக்கப்பட்டன.

2002 – குஜராத் மாநிலத்தில் இந்துக் கோயில் ஒன்றில் இடம்பெற்ற வன்முறையில் 32 பேர் உயிரிழந்தனர்.

2003 – சப்பானில் ஒக்காய்டோ என்ற இடத்தில் 8.3 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில், 800 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்..

2015 – இலங்கையின் மலையகத்தில் இறம்பொடையில் ஏற்பட்ட மண்சரிவில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.

2017 – இந்தோனேசியாவில் பாலித் தீவில் ஆகூங்க் மலையில் எரிமலை வெடித்தது.