• Sat. Jul 27th, 2024

இந்தியாவில் இருந்து ஆப்கானுக்கு விரைந்த விமானப்படை விமானம்!

Aug 16, 2021

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் வெளியேறி வருகின்றனர். தலிபான்கள் ஆட்சியில் என்ன நடக்குமோ? என்ற பீதியில் ஏராளமான ஆப்கான் மக்களும் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இதனால் விமான நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது.

காபூல் விமான நிலையத்தில் இருந்து வணிகரீதியிலான விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேசமயம் விமான நிலையம் மட்டும் அமெரிக்க படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்கள் தங்கள் நாட்டு குடிமக்களை விமானம் மூலம் அனுப்பிவருகின்றனர்.

பல்வேறு நாடுகள், தங்கள் நாட்டு மக்களை ஆப்கானிஸ்தானில் இருந்து சிறப்பு விமானம் மூலம் அழைத்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளன.

அவ்வகையில், ஆப்கானிஸ்தானில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்பதற்காக இந்திய விமானப்படையின் சி-17 ரக விமானம் புறப்பட்டுச் சென்றுள்ளது.

இந்த விமானத்தின் மூலம் முதற்கட்டமாக 500க்கும் மேற்பட்டோர் இந்தியா அழைத்து வரப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.