• Wed. Mar 27th, 2024

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீடிப்பு

Jul 27, 2021

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு இன்று அறிவித்தது.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் (49). சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால் அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த ஏப்ரல் மாதம் கோரிக்கை விடுத்தார்.

இதையேற்ற தமிழக அரசு பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கியது. இதைத்தொடர்ந்து, கடந்த மே மாதம் 28-ம் திகதி ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு பேரறிவாளன் வந்தார்.

வீட்டில் இருந்தபடி சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு பேரறிவாளன் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தார்.

இந்நிலையில், ஒரு மாதம் பரோல் காலம் முடிந்து பேரறிவாளன் கடந்த ஜூன் மாதம் 28-ம் தேதி மீண்டும் சிறைக்கு திரும்பியபோது, மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், ஜூலை 28-ம் தேதி (நாளையுடன்) பரோல் முடிவடைதால் பேரறிவாளன் சென்னை புழல் சிறைக்கு திரும்புவதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் மேற்கொண்டு வந்தனர்.

இதற்கிடையே, பேரறிவாளனின் பரோல் காலத்தை மேலும் நீடிக்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு விடுத்த கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு இன்று அறிவித்தது.

அத்துடன் ப்ரோல் காலத்தை பேரறிவாளன் இதுவரை என்னென்ன விதிமுறைகளை கடைப்பிடித்து வந்தாரோ அதையே பின்பற்ற வேண்டும் என சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.