• Sat. Jul 27th, 2024

வாகனங்களின் விலையை அதிகரிக்கும் பிரபல நிறுவனம்

Apr 2, 2022

ஹீரோ நிறுவனம் தனது தயாரிப்பு வாகனங்களுக்கு வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் 2,000 ரூபாய் வரை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்.

இந்நிறுவனம், தனது தயாரிப்பு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை ரூ.2,000 வரை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு ஏப்ரல் 5 முதல் அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளது.

மோட்டார் உதிரி பாகங்கள் மற்றும் வாகனப் பிரிவின் பல அம்சங்களின் ஏற்பட்டுள்ள விலை உயர்வால் இருசக்கர வாகனங்களின் விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விலை உயர்வு மாடல் மற்றும் சந்தையைப் பொறுத்து மாறுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வாகன தயாரிப்புக்கான உருக்கு, அலுமினியம், பிற உலோகங்கள் கச்சாப் பொருட்களின் விலை உயர்ந்திருப்பதால், வாகனங்களின் விலையை உயர்த்தப் போவதாக கார் நிறுவனங்கள் அறிவித்துள்ளனர். டொயோட்டா கார் நிறுவனம் 4% வரையும், பிஎம்டபிள்யூ 3.5% வரையும் தங்களின் கார்களின் விலையை உயர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.