• Fri. Mar 15th, 2024

இந்தியாவில் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும்

Jun 7, 2021

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

உலகில் உள்ள மற்ற நாடுகளைப் போல இந்தியாவும் கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறது. கடந்த 100 ஆண்டுகளில் கொரோனா மிகப்பெரிய தொற்றுநோய்.

கொரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசி மிகப்பெரிய ஆயுதம். இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்கப்பட்டிருக்கவில்லை என்றால் என்ன ஆகியிருக்கும்? குறிப்பிட்ட நாடுகள் மற்றும் நிறுவனங்கள் மட்டுமே தடுப்பூசியை தயாரித்து வருகின்றன.

இந்தியாவில் ஒரு வருடத்திற்குள் 2 மருந்துகள் உருவாக்கப்பட்டன. தடுப்பூசியின் தேவை அதிகரித்துள்ள நிலையில் உற்பத்தி நிறுவனங்கள் குறைவாகவே உள்ளன. தற்போது 23 கோடிக்கும் மேலானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

வரும் நாட்களில் தடுப்பூசி அதிக அளவில் வழங்கப்படும். நாட்டில் 7 நிறுவனங்களில் பல்வேறு தடுப்பூசிகள் தயாரிக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இதில், 3 தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளன. குழந்தைகளுக்கான 2 தடுப்பூசிகள் மீது பரிசோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இனி அனைத்து தடுப்பூசிகளும் மத்திய அரசால் வாங்கப்பட்டு மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். மாநிலங்கள் மேற்கொள்ளும் 25 சதவீத தடுப்பூசி பணிகள் இப்போது மத்திய அரசால் கையாளப்படும். இது வரும் இரண்டு வாரங்களில் செயல்படுத்தப்படும்.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் வரும் 21ம் தேதி முதல் இலவச கொரோனா தடுப்பூசி வழங்கப்படும். இலவச தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பாதவர்கள் தனியார் மருத்துவமனையில் பணம் கொடுத்து போட்டுக்கொள்ளலாம். தடுப்பூசி முகாம்களை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முக கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்றவற்றை எக்காரணம் கொண்டும் நாட்டுமக்கள் கைவிட்டு விடக்கூடாது.