• Tue. Apr 16th, 2024

இழப்பை ஒத்துக்கொண்ட ரஷ்யா

Mar 23, 2022

ரஷ்யா தனது மொத்த இராணுவத்தில் ஐந்தில் ஒரு பங்கை இழந்துவிட்டதாக ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 24 அன்று தொடங்கிய உக்ரைன் மீதான படையெடுப்பில், இதுவரை ரஷ்யாவின் துருப்புக்களில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது குறித்து இன்றுவரை ரஷ்யா வாய் திறக்கவில்லை.

உக்ரைனில் 498 வீரர்களை இழந்துள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் முன்பு தெரிவித்திருந்தது. ஆனால் திங்கட்கிழமை வெளியான புள்ளிவிவரங்களின்படி மாஸ்கோ 9,861 வீரர்களை இழந்துள்ளது, 16,153 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

அதேசமயம், போரின் தொடக்கத்தில் இருந்து ரஷ்யா தரப்பில் 15,000 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் கூறியுள்ளது. இதனிடையே, மேற்கத்திய உளவுத்துறை இந்த எண்ணிக்கையை 7,000 எனக் கூறுகிறது.

மார்ச் 21 திங்கட்கிழமை வெளியான புள்ளிவிவரங்கள் மாஸ்கோவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் புதுப்பிப்பின் ஒரு பகுதியாக Komsomolskaya Pravda இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ஆனால், இறப்பு எண்ணிக்கை பொதுமக்களின் பார்வையில் இருந்து விரைவாக அகற்றப்பட்டது என்றும், ஆனால் இணையதளத்தின் காப்பகத்தில் இருந்தது என்றும் கூறப்படுகிறது.

உக்ரைன் மீதான விளாடிமிர் புடினின் தாக்குதல் திட்டமிட்டபடி நடக்கவில்லை என் கூறப்படுகிறது. ரஷ்ய துருப்புக்கள் உக்ரைனின் சில பகுதிகளின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியுள்ள நிலையில், தலைநகர் கீவ் மீதான கிரெம்ளினின் முன்னேற்றம் மெதுவாக உள்ளது மற்றும் நாடு முழுவதும் படைகள் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்துவருகின்றன.

மேற்கத்திய வல்லுநர்கள் புடின் வான்வழித் தாக்குதல்களில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் தரையில் மெதுவாக முன்னேறும் தந்திரங்களை மாற்றக்கூடும் என்று எச்சரித்துள்ளனர்.

ஒரு மூத்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி, பெயர் தெரியாத நிலையில் பேசுகையில், ரஷ்யா கடந்த இரண்டு நாட்களில் வான்வழித் தாக்குதல்களை அதிகரித்துள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 300 வரையிலான விமானப் பயணங்களை மேற்கொண்டதாகவும் கூறினார்.

உக்ரைன் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து ரஷ்யப் படைகள் 1,100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை உக்ரைன் மீது ஏவியுள்ளன என்றும் அவர்கள் கூறினர்.