சூலை 19 கிரிகோரியன் ஆண்டின் 200 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 201 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 165 நாட்கள் உள்ளன.
இன்றைய தின நிகழ்வுகள்
64 – உரோமை நகரில் பரவிய பெரும் தீ, ஆறு நாட்களில் நகரின் பெரும் பகுதியை அழித்தது.
484 – லியோந்தியசு கிழக்கு உரோமைப் பேரரசராக முடிசூடி, அந்தியோக்கியாவைத் தனது தலைநகராக அறிவித்தார்.
998 – அரபு-பைசாந்தியப் போர்கள்: அபாமியா என்ற இடத்தில் நடந்த சமரில் பாத்திம கலீபகம் பைசாந்திய இராணுவத்தினரைத் தோற்கடித்தது.
1333 – ஆலிடன் குன்றில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்து இசுக்காட்லாந்துப் படைகளை வென்றது.
1545 – இங்கிலாந்தின் மேரி றோஸ் என்ற போர்க்கப்பல் போர்ட்ஸ்மவுத் என்ற இடத்தில் மூழ்கியதில் 35 பேர் மட்டும் தப்பினர். இக்கப்பலின் எச்சங்கள் 1982 இல் மீட்கப்பட்டன.
1553 – 9 நாட்களே இங்கிலாந்தின் அரசியாக இருந்த ஜேன் கிறே பதவியிழந்தார். முதலாம் மேரி அரசியாக முடி சூடினார்.
1588 – ஆங்கிலோ-எசுப்பானியப் போர்: எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு ஆங்கிலக் கால்வாயில் நிகழ்ந்தது.
1817 – உருசிய-அமெரிக்கக் கம்பனிக்காக அவாய் இராச்சியத்தைக் கைப்பற்ற கியார்க் சாஃபர் எடுத்த முயற்சி தோல்வியடைந்தது.
1821 – நான்காம் ஜார்ஜ் ஐக்கிய இராச்சியத்தின் மன்னராக முடிசூடினார்.
1845 – அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரில் பரவிய தீயினால் 30 பேர் உயிரிழந்தனர், 345 கட்டடங்கள் அழிந்தன.
1870 – பிரான்சு புருசியா மீது போரை ஆரம்பித்தது.
1900 – பாரிசில் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை ஆரம்பமாயிற்று.
1912 – அரிசோனா மாநிலத்தில் 190 கிகி எடையுள்ள விண்கல் ஒன்று வீழ்ந்து கிட்டத்தட்ட 16,000 துகள்களாகச் சிதறுண்டது.
1916 – முதலாம் உலகப் போர்: பிரித்தானிய, ஆத்திரேலியப் படைகள் சொம் சமரில் செருமானிய அகழிகளைத் தாக்கின.
1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியப் போர்க்கப்பல் ஒன்று அரச கடற்படையின் தாக்குதலில் மூழ்கியதில் 121 பேர் கொல்லப்பட்டனர்.
1943 – இரண்டாம் உலகப் போர்: உரோமை நகர் மீது கூட்டுப் படைகள் பெரும் வான் தாக்குதலை நடத்தின. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
1947 – பர்மாவின் நிழல் அரசின் பிரதமரும் தேசியவாதியுமான ஆங் சான் மற்றும் அவரது ஆறு அமைச்சர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1952 – பின்லாந்து, எல்சிங்கியில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாயின.
1964 – வியட்நாம் போர்: சாய்கோன் நகரில் இடம்பெற்ற பேரணி ஒன்றில், தென் வியட்நாம் பிரதமர் நியூவென் கான் வடக்கு வியட்நாம் வரை போரைத் தொடர அறைகூவல் விடுத்தார்.
1977 – உலகின் முதலாவது புவியிடங்காட்டி சமிக்கை அமெரிக்காவில் அயோவாவில் பெறப்பட்டது.[2]
1979 – நிக்கராகுவாவில் அமெரிக்க சார்பு சமோசா அரசு சண்டினீஸ்டா கிளர்ச்சிவாதிகளால் கவிழ்க்கப்பட்டது.
1980 – மாஸ்கோவில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாயின.
1983 – மனிதத் தலையின் முதலாவது முப்பரிமாண வடிவ வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி வெளியிடப்பட்டது.
1985 – இத்தாலியில் அணைக்கட்டு ஒன்று இடிந்ததில் 268 பேர் உயிரிழந்தனர்.
1989 – அமெரிக்காவின் யுனைட்டட் ஏர்லைன்சு விமானம் அயோவாவில் வீழ்ந்ததில் 111 பேர் உயிரிழந்தனர்.
1996 – ஓயாத அலைகள் ஒன்று: முல்லைத்தீவில் இலங்கைக் கடற்படையின் ரணவிரு பீரங்கிப் படகு விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது. ஏழு கடற் கரும்புலிகள் இறந்தனர்.
1997 – வட அயர்லாந்தில் பிரித்தானிய ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர 25 ஆண்டுகள் ஆயுதப் போரில் ஈடுபட்டு வந்த ஐரியக் குடியரசுப் படை போர்நிறுத்தத்தை அறிவித்தது.