• Mon. Mar 25th, 2024

கர்ப்பிணி மனைவியின் வயிற்றை கத்தியால் அறுத்து கருவை கலைத்த கொடூரன்

Jun 19, 2021

இந்தியாவின் கர்நாடகாவில் 3-வதும் பெண் குழந்தை பிறக்கப்போகிறது என்று தெரிந்ததால் வீட்டில் வைத்தே மனைவியின் வயிற்றை கத்தியால் அறுத்து கருவை தொழிலாளி கலைத்த கொடூர சம்பவம் நடந்து உள்ளது.

கர்நாடகா விஜயாப்புரா அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த். இவரது மனைவி விஜயலட்சுமி. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் விஜயலட்சுமி மீண்டும் கர்ப்பம் அடைந்தார். இந்த முறை தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என்று உறவினர்களிடம் அரவிந்த் கூறி வந்ததாக தெரிகிறது. அத்துடன் மனைவியின் வயிற்றில் என்ன குழந்தை வளர்கிறது என்பதை பற்றி அறிய அவரை ஸ்கேன் சென்டருக்கு அரவிந்த் அழைத்து சென்று உள்ளார்.

அங்கு ஸ்கேன் எடுத்து பார்த்த போது விஜயலட்சுமியின் வயிற்றில் வளருவது பெண் குழந்தை என்று தெரியவந்ததால் அதிர்ச்சி அடைந்த அரவிந்த் விஜயலட்சுமியிடம் வயிற்றில் வளரும் கருவை கலைத்து விடும்படி கூறியபோது அதற்கு விஜயலட்சுமி மறுத்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் விஜயலட்சுமி வீட்டில் இருந்தபோது வீட்டிற்கு 2 பேரை அரவிந்த் அழைத்து சென்று 3 பேரும் சேர்ந்து விஜயலட்சுமிக்கு வலுக்கட்டாயமாக கருவை கலைத்து உள்ளனர்.

இதனால் விஜயலட்சுமிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்த 3 பேரும் தப்பி சென்றனர். உயிருக்கு போராடிய விஜயலட்சுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் விஜயாப்புரா புறநகர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகிவிட்ட அரவிந்த் உள்பட 3 பேரையும் வலைவீசி தேடிவருகிறார்கள்.

இதேவேளை வயிற்றில் இருப்பது என்ன குழந்தை என கூறுவது சட்டப்படி குற்றமாகும். இந்த நிலையில் விஜயலட்சுமியின் வயிற்றில் இருந்த குழந்தையை பற்றி கூறிய ஸ்கேன் சென்டரிலும் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.