• Fri. Oct 18th, 2024

இந்தியாவின் கர்நாடகாவில் மேலும் 5 பேருக்கு ஒமைக்ரான்

Dec 16, 2021

உலகம் முழுவதும் தற்போது ஓமைக்ரான் தொற்று பாதிப்பு பெரும் அச்சுறுத்தலாக மாறி வரக்கூடிய நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

தலைநகர் டெல்லி, மராட்டியம், ராஜஸ்தான், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்க நாடுகளில் உருவாகியதாகக் கூறப்படும் இந்தப் புதிய வகை கொரோனா வைரஸ், 100க்கும் மேற்பட்ட நாடுகளில் தற்போதுவரை பரவி உள்ளது.

இந்தியாவில் கடந்த வாரம் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், சில நாட்களில் இந்த எண்ணிக்கை இந்தியா முழுவதும் 77 க்கும் மேலாக உயர்ந்தது.

வட இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கண்டறியப்பட்ட இந்தத் தொற்று, இரண்டு, மூன்று நாட்களாக தென்னிந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பரவிவருகிறது.

இந்த சூழலில் கர்நாடகாவில் மேலும் 5 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்கள் 2 தடுப்பூசி முழுமையாக செலுத்தி உள்ளார்கள் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்களில் இதுவரை 82 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.