• Tue. Mar 26th, 2024

பிரதமர் மோடியைக் கொல்லப் போவதாக வந்த போன் – நடந்தது என்ன?

Jun 6, 2021

எப்போது பார்த்தாலும் அப்பா திட்டிக்கொண்டே இருக்கிறார் என்ற காரணத்திற்காக இளைஞர் ஒருவர் செய்த செயல் போலீசாரையே கதிகலங்கச் செய்துள்ளது.

டெல்லி காவல் துறையினரின் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று(05) நள்ளிரவில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் பிரதமர் மோடியைத் தான் கொல்லப்போவதாகக் கூறிக்கொண்டு அழைப்பைத் துண்டித்துள்ளார். இதைக் கேட்டுப் பதறிப்போன கட்டுப்பாட்டு அறையின் அதிகாரிகள் உடனே மேலதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.

உடனே அலெர்ட்டான டெல்லி காவல்துறை அழைப்பு எண்ணை வைத்து அது கஜூரி ஹாஸ் பகுதியிலிருந்து வந்தது எனக் கண்டறிந்தனர். இதையடுத்து அந்த பகுதிக்குச் சென்ற போலீசார், அந்த பகுதியைச் சேர்ந்த சல்மான் என்றழைக்கப்படும் இளைஞர் அர்மானை கைது செய்தனர்.

பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில் தான் சிறைக்குச் செல்ல வேண்டும் என்ற காரணத்திற்காகவே கட்டுப்பாட்டுக்கு அறைக்கு அழைத்து பிரதமருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், வீட்டில் தந்தை திட்டிக் கொண்டே இருப்பதால் சிறை செல்வதற்காக இவ்வாறு செய்ததாகவும் இளைஞர் தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்டு கோபத்தின் உச்சிக்குச் சென்ற போலீசார், இந்த காரணத்திற்காகப் பிரதமருக்கு மிரட்டல் விடுவியா என அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது தான் அந்த இளைஞர் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்தபோது அவர் போதையில் இருந்தது தெரிய வந்துள்ளது.

இருப்பினும் இந்த விவகாரத்தில் பின்னணியில் யாரேனும் இருக்கிறார்களா, இளைஞருக்குப் போதைப் பொருள் எங்கிருந்து வந்தது என்பது குறித்துக் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் கைதான இளைஞர் ஏற்கெனவே கொலைக் குற்றத்திற்காகச் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருந்தவர் எனவும், இவர், கடந்த 2018ஆம் ஆண்டு தான் விடுதலையானார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.