• Sat. Apr 20th, 2024

பிரபஞ்சத்தின் வெகு தொலைவிலிருந்து பூமி நோக்கி ரேடியோ சிக்னல்கள்!

Jun 11, 2021

பிரபஞ்சத்தின் வெகு தொலைவிலிருந்து பூமி நோக்கி ரேடியோ சிக்னல்கள் வருவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மிகப்பெரிய பிரபஞ்சத்தில் ஒரு புள்ளியை விடவும் குறைவான அளவில் உள்ள சூரிய குடும்பத்தில் பூமி இருந்து வருகிறது. இதுநாள் வரையிலான வானியல் ஆராய்ச்சிகளில் பூமியை தவிர்த்து மற்ற எந்த கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதாக கண்டறியப்படவில்லை.

எனினும் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள், கோள்கள், குறுங்கோள்கள், நிலவுகள் உள்ள இந்த பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு மூலையில் ஜீவராசிகள் வாழக்கூடும் என்ற நம்பிக்கையையும் தொடர்ந்து வானியல் விஞ்ஞானிகள் சிலர் நம்பி வருகின்றனர்.

இந்நிலையில் விண்வெளிக்கு ரேடியோ அலைகளை அனுப்பி பதில் வருகிறதா என்பதை ஆராயும் நடைமுறையை விஞ்ஞானிகள் நிகழ்த்தி பரிசோதனையும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது கனடாவில் உள்ள ரேடியோ டெலஸ்கோப் ஆய்வு மையத்தில் நூற்றுக்கணக்கான அதிக அலைநீளம் கொண்ட ரேடியோ அலைகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை விண்வெளியில் மிக தொலைவிலிருந்து வந்திருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வானில் நியூட்ரான் நட்சத்திரங்களால் ஏற்படும் ரேடியோ அலைக்கற்றைகள் பூமியை தாண்டி செல்கின்றன.

தினசரி தோராயமாக 9 ஆயிரம் அதிவேக ரேடியோ அலை தாக்கம் கண்டறியப்படுவதாக கனடாவின் ரேடியோ அலை ஆய்வகமான CHIME தெரிவித்துள்ளது. ஆனால் அதிக அலைநீளம் கொண்ட அதிவேக FRB ஒரு வருடத்திற்குள்ளாக 535 கண்டறியப்பட்டுள்ளது.

இவற்றை மனிதனை போன்றே பிரபஞ்சத்தின் வேறு பகுதியிலிருந்து யாரும் அனுப்பியிருக்க கூடுமோ என ஏலியன் நம்பிக்கையாளர்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ள நிலையில், விஞ்ஞானிகள் அதுகுறித்த தெளிவான விளக்கங்கள் எதுவும் அளிக்கவில்லை.